thendral saravanan

Friday, October 8, 2010

பாரதி பற்றி ...

           பாரதி பாடல்களில் நிறைந்துள்ள தேசியம்


அடிமை தேசத்தில் ,அடர்ந்த இருட்டில் ,ஞான சூரியனாய் வலம் வந்தவன் பாரதி . நொறுங்கிப் போன பாரதத்தை தன் பாட்டு திறத்தால் மருத்துவம் செய்த நல்லதோர் வீணையவன் .
பாரதி பல்துறைகளைப் பற்றி பல பாடல்கள் பாடியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் தேசியம் நிறைந்து அழகு செய்வதைக் காணலாம் .
அவன் பாடிய தேசிய கீதங்கள் ,தோத்திரப் பாடல்கள் ,வேதாந்தப் பாடல்கள் ,பல் வகைப் பாடல்கள் ,தனிப் பாடல்கள் வசனக் கவிதை -இவை அனைத்திலும் தேசிய மணம் கமழ்வதை காணலாம். பாரதி  தேசியத்தை நேரடியாக ஓங்கி உரைத்தும் ,இலைமறை காயாக ஊடாடவிட்டும் மகிழ்ந்ததைக் காணலாம்.


தேசியப் பார்வை


பாரதியின் விடுதலை வேள்வியில் அவன் தென்றலாகவும்,சூறாவளியாகவும் எரிமலையாகவும் தேசியத்தை பல்வேறு நிலைகளில் அமர்ந்து தேசத்தில் ஞான ரதம் ஓட்டியவன்.
                   "பாரத பூமி பழம்பெரு பூமி.
                     நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் "


என்று தாய் நாட்டின் மகத்துவத்தை உணரும் படி செய்தவன்.தேசியம் பாடியே நாட்டுப் பற்றை வளர்த்தவன்.


                    "பெற்ற தாயும் ,பிறந்த பொன்னாடும்
                        நற்றவ வானினும் நனி சிறந்தனவே."


என்று பிறந்த நாட்டின் பெருமையை ,அதன் உன்னதத்தை பெற்ற தாயுடன் சரிசமமாக பாவித்தவன்.
காசியில் வாழ்ந்த போது ,அந்த வாழ்க்கை பாரதியை தேசிய வழியில் திருப்பியது.
தேசாவேசம் மிகுந்த திலகர் பெருமானின் குமுறலின் எதிரொலி பாரதியின் உள்ளத்தில் ஒலித்தது.அதன் விளைவாக தேசியப்பாடல்கள் பிரவாகமெடுத்து ஓடியது.அப்படித் தன்னை  கரைத்ததால் தேசியக் கவியாக என்றும் போற்றப்படுகிறான்.


பாரதியின் பார்வையில் தேசியம்.


நாட்டின் விடுதலைக்கு தன் பாட்டைத் திறவுகோலாக வார்ப்படம் செய்தவன் பாரதி.
இவன் விடுதலைப்பற்றி சிந்தித்தபோது...


                   "விடுதலை !விடுதலை ! விடுதலை!
                      பாரத மாதாவிற்கு வேண்டும் விடுதலை!"


என்று பொத்தாம் பொதுவாகப் பாடவில்லை.மாறா


                      "விடுதலை!  விடுதலை! விடுதலை!
                         பறையருக்கு மிங்கு தீயர்
                         புலையருக்கும் விடுதலை!
                         பரவரோடு குறவருக்கு,
                         மறவருக்கும் விடுதலை!"


என்று நாட்டின் உண்மை நிலையைப் படம் பிடித்து உண்மையான தேசியத்தை உணர வைத்தவன் பாரதி.ஆம்.ஆங்கிலேயன் 
  நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதற்கு  முன்னால்,பறையர்களையும்,புலையர்களையும் இன்னும் சில சாதிசார்ந்தவர்களையும் தீண்டத்தகாதவர்களாக ,தாழ்த்தப் பட்டவர்களாக ஆண்டாண்டு காலமாக,அவர்களை அடிமைப் படுத்திய கொடுஞ்செயலைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் பொங்கி எழுந்தவன் பாரதி.அதனால்தான் அவனால் தேசியத்தை மேலோட்டமாக பார்க்க முடியவில்லை.


நம்மக்கள் நம்மவர்களால் கொடுமைப்பட்டு ,அடிமைப்பட்டுக் கிடந்து உழன்றது அவனுக்கு சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கமே விடுதலையின் உண்மைப் பொருளை ,அதன் ஆழத்தை ,அதன் அகலத்தை அறியச் செய்தது.


                "ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே-நம்மில் 
                  ஒற்றுமை நீங்கிலனைவருக்கும் தாழ்வே"


என்று சாதியாலும் மதத்தாலும் மொழியாலும் பண்பாட்டாலும் சிதறிக்கிடந்த மக்களுக்கு தேசியத்தின் பேருண்மையை பெரும் தத்துவத்தை சத்தம் போட்டு உரைத்தவன் பாரதி.மேலும் அவன் சாதி மறுத்தவன் .ஆம்,வெறும் பாடல்களில் மட்டும் சாதி மறுக்கவில்லை அவன் செயலிலும் வாழ்ந்துக் காட்டியவன்.பார்ப்பன  குலம் எனும் உயர்ந்த சாதியாக கருதப்பட்டதில் பிறந்தாலும் அவன் உடலில் குறுக்கே ஓடிய பூணுலை ,அதன் சாதி வெறியை அறுத்து எறிந்தவன் பாரதி.


எவன் செய்வான் இது போன்று .சாதித்தளைக்குள் இருந்து கொண்டு தேசியம் பற்றி பாசாங்கு செய்யாமல் உண்மையான சாதி மறுப்பாளனாக பாடியது மட்டும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டியவன்.இப்படித் தொடர்ந்து தேசியத்தை வலியுருத்தியதாலேயே அந்த சாதியினரால் "ஜாதிப்ரஷ்ட்டம்"செய்யப்பட்டான் .ஆனால் மற்ற அனைவருக்கும் சொந்தமாகிப்போனான்.அதுவே தேசியம் கொடுத்த மாபெரும் பரிசாகும்.
அடிமைத்தளையால் கட்டுண்டு நாட்டுமக்கள் நாறிக்கிடந்த வேளையில் 


                       "முப்பது கோடியும் வாழ்வோம் -வீழில் 
                         முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்."


என்ற ஆவேச முழக்கத்தில் தேசியத்தின் அடர்ந்த அர்த்தத்தை ஆழப் பதித்தான்


காலத்தின் கட்டாயத்தால் தேசியப் பாடல்களை மிகுதியாகப் பாடியுள்ள பாரதி காலங்கடந்தும் நம்மிடையே வாழ்கிறான்.


மரபுக்கும் புதுமைக்கும் பாலங்கட்டிய பாரதி மானுடம் போற்றும் மகத்தான தேசிய சிந்தனைகளை வழங்கியுள்ளான்.


ஞானப்புயலான பாரதியை நம் உள்ளத்தில் நிறைத்துவிட்டால் சாதி, மதம் மற்றும் பிற வேறுபாடுகள் கடந்த உயர்ந்த நிலையை அடையலாம்.இந்நிலையே நமக்குள் தேசியத்தை நிறைத்துவிடும்.அந்நிலையே பாரதிக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.       

No comments: